Search This Blog

04/07/2022

வணிகவியல் பட்டயப் படிப்பை (டி.காம்) முடித்தவர்கள் இனி பி.காம். 2-ம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம்.!

 


சென்னை: வணிகவியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் டி.காம். (Diploma in Commercial Practice) பட்டயப் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று பேராசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல் உட்பட உயர்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சூடுபிடித்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக பி.காம். படிப்புக்கான மவுசு உயர்ந்து வருவதால் அதில் சேர மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், பள்ளிகளிலும் பிளஸ்-1 மாணவர் சேர்க்கையில் வணிகவியல் பாடமே முன்னிலை வகிக்கிறது.

இதன் காரணமாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குகூட பள்ளி, கல்லூரிகளில் வணிகவியல் பாடம் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் வணிகவியல் பட்டயப் படிப்பை (டி.காம்) முடித்தவர்கள் இனி பி.காம். 2-ம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது பி.காம். படிப்பை குறிவைத்து படிக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு என்று பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில வணிகக்கல்வி பயிலகத்தின் முதல்வர் கா.முத்துக்குமார் கூறியதாவது: பிளஸ்-2 முடித்த 2 லட்சம் மாணவர்கள் பி.காம். படிப்பில் சேர விரும்புகின்றனர். ஏனெனில், பி.காம். முடித்தவர்களுக்கு எளிதில் உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

எனினும், அதிகளவில் சேர்க்கை இடங்கள் இல்லாததால் பலர் விருப்பம் இருந்தும் வேறு படிப்புகளை தேர்வுசெய்ய வேண்டிய சூழல் உள்ளது. அத்தகைய பி.காம். படிப்பில் எளிதாக சேர தற்போது டி.காம். பட்டயக் கல்வி வழிவகை செய்கிறது.

தமிழகத்தில் டி.காம். பட்டய படிப்பு 50 ஆண்டுகளுக்கு மேலாக கற்றுத் தரப்படுகிறது. பி.காம். படிப்பின் பாடங்களை ஒத்திருப்பதுடன், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிணிப் பயிற்சி (டேலி, டிடிபி) ஆகியவையும் இதனுடன் சேர்த்து பயிற்றுவிக்கப்படுவதால் அரசு, தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் டி.காம்.

முடித்தவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. டி.காம். படித்த 80 சதவீதம் பேர் தற்போது நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

அதேபோல், டி.காம். படிக்கும் மாணவர்கள் பெறும் பட்டய சான்றிதழ் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் கணக்கியல், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து உட்பட அரசுத் தேர்வுகளுக்கு இணையானதாகவும் கருதப்படும்.

மிக முக்கியமாக ஆண்டு கல்லூரி கட்டணம் ரூ.2500 தான் என்பதால் ஏழை, எளிய மாணவர்களுக்கு சிக்கல் இருக்காது. மேலும், அரசு நலத்திட்டங்கள், உதவித் தொகைகள் மாணவர்களுக்கு கிடைக்கும்.

இதுதவிர மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பினால் தங்களுக்குப் பிடித்த கல்லூரியில் பி.காம். படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம்.

இதற்காக அனைத்துவித கல்லூரிகளிலும் பி.காம். நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு கூடுதலாக 10 சதவீதம் இடங்கள் ஏற்படுத்திக்கொள்ள உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த டி.காம். படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதலாமாண்டு சேர்க்கை பெற பத்தாம் வகுப்பிலும், நேரடி 2-ம் ஆண்டு சேர பிளஸ்-2 வணிகவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த படிப்பு தமிழகத்தில் சென்னை மாநில வணிகக் கல்விப் பயிலகம் (இருபாலர்), தர்மாம்பாள் அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஊட்டியில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி (இருபாலர்) மற்றும் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி (இருபாலர்) ஆகியவற்றில் உள்ளது.

மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 




No comments:

Post a Comment