அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய ‘தேர்வுக்களம்’ செயலி குறித்து மாவட்ட அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வு முகமைகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறைச் செயலர் சி.சமயமூர்த்தி, அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட அரசு பணிகளுக்கான தேர்வு முகமைகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், தமிழக அரசு ‘தேர்வுக்களம்’ என்ற ஒருங்கிணைந்த கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த செயலியில், அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அனைத்து ஆள்சேர்ப்பு அறிவிப்புகள், அத்தேர்வுகளுக்கான இணையவழி விண்ணப்பம், தேர்வு முடிவுகள், செய்தி வெளியீடுகள், தேர்வுக்கான பாடக் குறிப்புகள், முந்தைய போட்டித் தேர்வுகளின் விடைகளுடன் கூடிய வினாத்தாள்கள், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளின் காணொலிகள், வேலைவாய்ப்புச் செய்திகள் உள்பட செய்தித்தாள்களில் அளிக்கப்படும் அறிவிப்புகள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும்.
குறித்த நேரத்தில் நுழைவுச் சீட்டுகள், தேர்வு முடிவுகள் மற்றும் முக்கிய தகவல்கள் நேரடியாக ஆர்வலர்களின் கைப்பேசிக்கு உடனடியாக அறிவிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், எந்த தகவலும் தவறவிடாமல் தேர்வர்கள் சிறப்பாகவும், திறமையாகவும், தேர்வுக்கான தயாரிப்பை மேற்கொள்ள முடியும்.
அதோடு ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு உள்பட மத்திய அரசின் தேர்வு முகமைகள் (யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி) மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்களையும் இச்செயலியில் பெறலாம்.
போட்டித் தேர்வர்கள் ‘தேர்வுக்களம்’ செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளே நுழையும்வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது மிக எளிதாக இருக்கும்.
எனவே, தேர்வுக்களம் செயலியின் பயன்பாட்டை பயனாளிகள் அறிந்துகொள்ளும் வகையிலும், அதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து உரிய வகையில் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் விதமாகவும் இச்செயலி குறித்து மாவட்ட அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Download Now
🙏🏼
.jpeg)