Showing posts with label Ayush Medicine. Show all posts
Showing posts with label Ayush Medicine. Show all posts

12/07/2026

‘ஆயுஷ்’ படிப்புக்கு நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்: இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை அறிவிப்பு, கடைசி நாள்: 31-7-2026

 



சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் ஆகிய ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.

சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது www.tnayushselection.org என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் நாளை (ஜூலை 13) தொடங்குகிறது. இம்மாதம் 31-ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப் பிக்கலாம்.

நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும்போது, நீட் தேர்வு ஹால் டிக்கெட் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்மூலம், நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் மத்திய அரசிடம் இருந்து நீட் மதிப்பெண் பெற்றுக் கொள்ளப்படும்.


யோகா - இயற்கை மருத்துவம்: சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகளும், 20 தனியார் கல்லூரிகளும் உள்ளன. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கும் (பிஎன்ஒய்எஸ்) மேற்கண்ட இணையதளத்தில் நாளை முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு இதற்கு கிடையாது.

சிறப்பு பிரிவினருக்கு.. மேற்கண்ட 5 வகையான ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு சிறப்பு பிரிவில் (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) விண்ணப்பிப்பவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து, ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106’ என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.