அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக ஜூன் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் எமிஸ் தளம் மூலமாக ஜூன் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது முன்னுரிமை கோருபவர்கள் தேவையான ஆவணங்களை முழுமையாக இணைக்க வேண்டும். ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு இருப்பது பின்னர் கண்டறியப்பட்டால் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஆசிரியர்களின் விண்ணப்பங்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர்கள் தாமதமின்றி ஒப்புதல் தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🙏
No comments:
Post a Comment